| கல்லூரிகள் ஊருக்கொன்று என்ற நிலை மாறி, இப்பொழுது வீதிக்கு இரண்டு என்று உருவாகிவிட்டன. ஆனால் மாணவர்களின் வாழ்க்கைப்பாதையை இவைகள் செப்பனிடுகின்றனவா?... எண்ணிப் பாருங்கள். |
தமிழினத்தின் வரலாற்றை தொடராக எழுதுவதில் மட்டற்ற மகிழ்வும் பெருமையும் கொள்கிறேன். தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஏராளமான செய்திகள் உங்களுக்கு இந்தத் தொடரில் தொகுத்தளிக்கப்படவிருக்கின்றன.
தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லிக்கொண்டு திரியும் யாருக்கும் தமிழின் உண்மையான பின்புலம் என்னவென்று தெரியுமா? கேட்டுப்பாருங்கள் கேட்டால் வள்ளுவன்தான் எங்கள் தலையாய புலவன். வள்ளுவர் தினத்தைத் தான் நாங்கள் தமிழ்ப் புத்தாண்டெனக் கொண்டாடுவோம் என்பார்கள்.
இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பத்திரண்டாயிரத்து சொச்ச ஆண்டுகளுக்கு முன் (50,000 BC) நாகரீகத்தில் முழுவளர்ச்சி பெற்றிருந்த லெமூரீயா என்றழைக்கப்பட்ட குமரிக்கண்டத்தின் (காண்க: படம்) வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்ளாமல் என்ன செய்யச் சொல்கிறீர்கள்.
என்னது? ஐம்பதாயிரமாண்டுகளா? நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே, அப்பொழுதெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்களா என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கைதான். உண்மையில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் தமிழ் மொழி தோன்றியது என்று கணக்கிடப் பட்டிருக்கிறதென்பதை நீங்கள் கேட்டால் மயங்கியே விழுந்துவிடுவீர்கள்.
இன்றிலிருந்து பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் நமது தாய்த் தமிழ்க் கண்டம் கடலுக்குள் மூழ்கிப்போனபோது மூழ்காமல் எஞ்சியிருந்த தமிழ்நாடு, இலங்கையில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம்பெயர்ந்து சிங்கப்பூர், மலேசியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்தின் மக்கள் தொகையில் வெறும் எள்ளளவுதான். எடுத்துக்காட்டாகச் சொன்னால் இன்றிருக்கும் சீன மற்றும் அமெரிக்கக் கண்டங்களுக்கிணையான நிலப்பகுதியனைத்தும் தமிழ்நாடாக இருந்திருக்கிறது. இது பற்றிய கருத்துக்களை பல கலைக்களஞ்சியங்களிலிருந்தும், தமிழ் மொழி இலக்கியப் புத்தகங்களிலிருந்தும் படித்துத் தெரிந்து கொண்டபோது நாம் இதையெல்லாம் உணராத முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று வெட்கித் தலைகுனிந்தேன். இது தமிழில் மொழி ஞாயிறு என்றழைக்கப்பட்ட தேவநேயப் பாவாணர் மற்றும்ம அவருக்குபின் அவரது மாணவராக இருந்த மதிவாணன் ஆகியோரது முயற்சியினால் இன்றிலிருந்து கிட்டத்தட்ட பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் இருந்த பழந்தமிழ்க் கல்வெட்டுக்களின் மொழிபெயர்ப்பில் இருந்து கண்டுணரப்பட்டுள்ளது.
சிந்து சமவெளி நாகரீக வாழ்க்கையின் உருவாக்கத்தில் தமிழர்களும் பங்கெடுத்துள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால், அது நடந்தது வெறும் ஐயாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான். அது தோன்றிய இடம் தற்போதைய வடஇந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். அப்போதுதான் ஆரியர்கள் படையெடுப்பால் முழுக்க கலப்படமான நாகரீகத்தைத் தழுவவேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.
உண்மையில் தமிழர் நாகரீகத்தின் சிறப்புத்தன்மைகளை நீங்கள் கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சாதிகள் புகுத்தப்பட்டது மற்றும் பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது ஆரியக் கலப்பால் என்பதைச் எடுத்துச் சொல்வதற்குமுன், பழந்தமிழ் நாகரீகத்தில் வாழ்ந்தது ஒரே சாதிதான் அது தமிழ்ச் சாதி என்றும் ஆண்கள் பெண்கள் இருவரும் சமமாக சமுதாயத்தால் போற்றப்பட்டனர் என்றும் முழுக்க முழுக்க 100 விழுக்காடு காதல் திருமணம்தான் நடந்திருக்கிறது என்றும் நீங்கள் உணர்ந்தால் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள்.
அடுத்த வாரம் இதன் தொடர்ச்சியில் பல வகையில் புல்லரிக்கும் செய்திகள் உங்களை வந்தடைய இருக்கின்றன. உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 03 சனவரி 2011 11:52)