| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
பழையன
அரசுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கும் மக்களின் நலனுக்குமே அரசாங்கத்தால் உருவாக்கப்படுவதாக பாராளுமன்றச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திராகாந்தி தேசியத்திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தொலைக்கல்வி வழங்குவதில் முன்மாதிரிப் பல்கலைக்கழகமாக விளங்கவே உருவாக்கப்பட்டு பாராளுமன்றச்சட்டமாக இயற்றப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் பல மக்கள் வரிப்பணத்திலும் (சாலைவரி, வீட்டுவரி, வருமான வரி இப்படிப்பல வரிகள்) அந்நியச்செலாவணியிலுமே பல நிறுவனங்களை இயக்கி அதன் மூலம் நாட்டின் தேவைகளையும் நாட்டு மக்களின் தேவைகளையும் தீர்த்துவைக்கவே (இலாப நோக்கில் இயங்காமல்) பல அரசுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் முக்கியமான தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
விளைபொருட்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லவும், மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் தொழிற் பொருட்களை ஏற்றிச்செல்லவும் போக்குவரத்து இன்றியமையாததாகி விடுவதால் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்கள் விலையேற்றம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடியதாகிவிடுகிறது. 1 ரூபாய் விலையேறினாலும் போக்குவரத்துச் செலவு அதிகமாகிவிடுவதால் மற்ற பொருட்களின் விலையும் அதிகமாகிவிடுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அரசு மானியம் கொடுப்பதாகவும், எனவே குறைவான விலைக்குக்கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆதாவது, 1 லிட்டர் பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கு விற்றாலும் அரசு 40 லிருந்து 50 ரூபாய்வரை அதிகம் செலவிட்டு ஆகமொத்தம் 90 ரூபாய்க்கு (தோராயமாக) வாங்கி மக்களுக்கு வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. இது உண்மையா என்று ஆராய்ச்சி செய்தால் பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைக்கின்றன.
பொதுத்துறை நிறுவனங்களான, பாரத் பெட்ரோலியம், கெய்ல் (Gas Authority of India Limited), இந்துஸ்தான் பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி. (Oil and Natural Gas Corporation) போன்றவற்றின் வளர்ச்சி மற்றும் இலாபம் பற்றிய ஒரு தகவலை பழனிச்சாமி எனும் ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
முதலில் Oil and Natural Gas Corporation எனும் அரசு பொதுத்துறை நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். 77% இந்தியநாட்டின் கச்சாயெண்ணைத் தேவையையையும் 81% எரிவாயுத் தேவையையும் பூர்த்தி செய்யும் Fortune 500 நிறுவனங்கள் வரிசையில் 152 இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவிலேயே அதிக இலாபம் பெறும் நிறுவனம் ஆகும். 24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 2008 வருடத்தில் வருமானம் பெற்றிருக்கும் இந்த நிறுவனம் 34 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் சொத்துக்களை வைத்திருக்கிறது.
அடுத்த நிறுவனமான பாரத் பெட்ரோலியம் Fortune 500 நிறுவனங்களில் 325 வது நிலையிலிருந்து 287 வது நிலைக்கு முன்னேறியிருக்கிறது. இதன் வருமானமும் 27 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிச் செல்கிறது 2008ம் வருடக் கணக்குப்படி)
இந்துஸ்தான் பெட்ரோலியம் எனும் நிறுவனம் Fortune 500 நிறுவனங்களில் 311 வது இடத்தைப் பெறுகிறது. இதன் வருமானமும் அதே அளவுதான்.
ஆக எந்த எரிபொருள் நிறுவனமும் வருமானத்தில் குறைவதில்லை. இதுபோக இந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் அளவுக்கதிகமான ஊக்கங்களும் வசதிகளும் கிடைப்பதில் குறையேதும் இருப்பதில்லை. இதில் இவை போட்டிபோட்டுக்கொண்டு விளம்பரம்வேறு செய்து பல கோடிகளை வீணாக்குகின்றன. விளம்பரம் செய்யாவிட்டால் மக்கள் பெட்ரோலும், டீசலும் மற்றும் எரிவாயுக்கலனும் வாங்காமல் விட்டுவிடுவார்களா என்ன?
கோடி கோடியா வரும் வருமானம்; ஆனால் மக்களிடம் பஞ்சப்பாட்டுப் பாடி தனியார் நிறுவனங்கள் போல இலாபநோக்கில் இவை செயல்படுவதால் மக்கள் இன்றியமையாத தேவைகளான, உணவுப் பொருட்கள், காய்கறிகள், துணிமணிகள், வீட்டு உபயோகப்பொருட்கள், மணல், சிமெண்ட், இப்படிப் பலபொருட்களும் விலையேறி கீழ்த்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் வாட்டி வதைக்கிறது. இந்தக் கொடுமைவேறின்றி நம்மை மாற்றாந்தாய் மகளாய் நினைக்கும் சீனாவுக்கு வேறு எரிவாயு, எரிபொருள் ஏற்றுமதிக்கு இந்த அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் பணத்தை சீன நிறுவனங்களில் முதலீடு செய்து அதில் வேறு இலாபம் சம்பாதிக்கப் போகின்றன.
பின் வரும் இணைப்புச் செய்தியைப் படியுங்கள்
மக்கள்தான் 500 ரூபாய்க்கு வாக்குக்களை விற்கும் குடிகாரக் கும்பலாய் இளிச்சவாயர்களாயிற்றே, பிறகெங்கே நாடு நலம்பெற வழி.
சாமிக்கே ஒட்டுக் கோவணமாம், பூசாரி புதுத்துணி கேட்டானாம் என்கிற கதைதான்.
http://en.wikipedia.org/wiki/Oil_and_Natural_Gas_Corporation
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010 21:29)