| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (12) - ஊளைத்தசையைக் குறைக்கும் பெருஞ்சீரகம் (சோம்பு)
Pimpinel Anisum என்ற தாவரவியல் பெயர்கொண்ட சோம்பு எனும் பெருஞ்சீரகம் நடுத்தரைக்கடல் பகுதியில் முதலில் தோன்றியது. பல்கேரியா, சைரேசு, பிரான்சு, செருமனி, இத்தாலி, மெக்சிகோ, தென் அமெரிக்கா, சிரியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் இராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் சிறு அளவில் பயிரிடப்படுகிறது. நம் நாட்டின் தேவைகளுக்கு அதிகமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
| சத்துக்கள் |
விழுக்காடு |
| புரதம் | 18 |
| சத்து எண்ணை |
2.7 |
| கொழுப்பு எண்ணை |
8 முதல் 23 |
| சர்க்கரை வகை |
3.5 |
| மாவுச்சத்து |
5 |
| நார்ச்சத்து |
12 முதல் 25 |
| சாம்பல்சத்து |
6 முதல் 10 |
| குளோரின் |
சிறிதளவு |
இது சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் உணவிலும் பெரிதும் பயன்படுகிறது. மேலும் அடுமனைகளில் (Bakery) செய்யப்படும் உணவுப்பொருட்கள், இனிப்புவகைகள், குளியல் கட்டிகள் (Soap), பல்பொடி, மதுவகைகள் ஆகியவற்றில் வாசனைக்கூட்டுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கான கிரைப் வாட்டரில் சோம்பு முக்கியப்பொருள்.
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம் நாட்டு மூதறிஞர் பிளினி அவர்கள் இதை ஆராய்ந்து உடலை மெலிய வைக்கும் குணம் இந்த பெருஞ்சீரகத்துக்கு இருப்பதாகக் கண்டறிந்தார். பின்னர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேல்நாட்டு மூலிகை நிபுணர் வில்லியம் கோவீஸ், சோம்பின் இலை, வேர், விதை ஆகியவற்றை உணவில் எவ்வாறேனும் சேர்த்துக்கொள்பவர்கள் பருத்த உடலினராயிருப்பினும் மேலும் பருமனையாமல் தடுக்கப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
யோனி நோய், குன்மம்,
உருட்சை, மந்தம், பொருமல்,
பேனமுறு, காசம்
பீலிக மிரைப் - பீன உரை
சேர்க்கிற வாதம் போஞ்
சீர்பெரிய சீரகத்தால்
மூக்கு நோயில்லை மொழி
என்று அகத்திய மாமுனி கூறியிருக்கிறார்.
இதை உரிய முறைப்படி உண்பதால் கருப்பை மற்றும் கருப்பை வாயிலில் ஏற்படும் நோய்கள், வயிற்றுவலியால் ஏற்படும் காய்ச்சல், உப்பிசம், உணவு செரிக்காமை, இருமல், இரைப்பு, குரல் கம்மல், மூக்கு நீர்பாய்தல், ஈரல் நோய் மற்றும் வாத நோய் போன்றவை தீரும்.
100 கிராம் அளவு பெருஞ்சீரகத்தை இளவறுப்பாய் வறுத்து, பொடியாக அரைத்து சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து ஒரு கண்ணாடிக்கலனில் வைத்துக்கொண்டு காலை மாலை சிறிது உண்டுவர, உணவுச் செரிமானப் பாதை சீரடைந்து சுறுசுறுப்படையும். வாயுத்தொல்லை தீரும். மலச்சிக்கல் தீரும். மூளைக்கு சுறுசுறுப்பைத் தந்து நினைவுத்திறனைக் கூட்டும். உடல் பருமன் குறையும். வயிற்றுப்புண் ஆறும். கிருமிகள் ஒழியும். குழந்தைப் பேரில்லாத பெண்கள் தொடர்ந்து உண்ண கருப்பைக் கோளாறுகள் நாளடைவில் சீரடைந்து கருத்தரிக்க வாய்ப்பு அதிகம். அதிகமாக உண்பதால் தாமதித்த மாதவிடாயைத் தூண்டும்.
இதையே ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தொடங்கி 90 நாட்கள் சாப்பிட்டுவந்தால் அந்த ஆண்டு முழுவதும் வேறெந்த நோயும் அண்டாது.
25 கிராம் அளவு பெருஞ்சீரகம், 5 கிராம் அளவு கடுக்காய்த் தோல், 250 மில்லி தண்ணீரில் கசாயம் வைத்து வடித்து 2 தேக்கரண்டி தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் உண்பதால் உடலிலுள்ள ஊளைச் சதை குறையும். இதை அலுமினியக் கலன்களில் செய்யக்கூடாது; மாறாக வெண்ணுலோகக் (சில்வர்) கலன்களில் செய்யவும்.
இப்படிப் பல நன்மைகள் வழங்கும் சோம்பு எனும் பெருஞ்சீரகத்தைப் பயன்படுத்தி சோம்பலின்றி உழைத்து எல்லா வளமும் பெற்று வாழ்வோம்.
தொடரும்...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 24 அக்டோபர் 2009 22:25)