| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (8) - நலம் தரும் சம்பங்கி
மணமிக்க மலர்களை அணிந்துகொள்வதால் உடல் உற்சாகமும் மனமகிழ்ச்சியும் அடைவதென்பது நெடுங்காலமாக அறிந்த உண்மை. சோதிடமுறையில் கூட கிரகங்களால் ஏற்படும் தீமைகள் கூட குறிப்பிட்ட மலர்களை அணிவதால் குறையும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்குப் பிரியமான பூக்களில் சம்பங்கி எனப்படும் சண்பகப்பூவும் ஒன்று. இந்தப்பூ மரத்தில் பூப்பதாகும். வீடுகளிலும் தோட்டங்களிலும் ஆலயங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது.
ஆந்திர நாட்டில் பரவலாகவும், சிம்மாசலம் என்ற இடத்தில் அதிகளவிலும் இயற்கையாகவே வளர்ந்துள்ள இம்மரத்தின் அனைத்து பகுதிகளும் மிகச்சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.
வாதபித்த மஸ்திசுர
மாமேகஞ் சுத்தசுரம்
தாது நஷ்டக் கண்ணழற்சி
தங்காவே மாதேகேள்
தின்புறு மனக்களிப்பாந்
திவ்யமண முட்டிணஞ்சேர்
சண்பகப் பூவதற்குத்தான்
வாதசுரம், பித்த சுரம், எலும்பு (அஸ்த) சுரம், கிருமித் தொற்றுதலால் ஏற்படும் சுத்தசுரம், மேகநோய்கள், ஆண்களின் தாது நட்டம், கண்ணழற்சி போன்றவை சண்பகப்பூவால் தீரும் என்கிறது அகத்தியர் குணவாகடம்.
150 கிராம் அளவு பூக்களை 200 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் கொதிக்கவைத்து 50 மில்லி லிட்டர் அளவு சுருக்கி வடித்து காலை - மாலை அருந்தி வந்தால் உணவு செரிமானத் தொல்லை, வயிற்று நோய்கள், மலச்சிக்கல், உட்சூடு குறையும். பிறப்புறுப்பில் வரும் புண், சீழ் அரிப்பு, எரிச்சல் வெள்ளைப்போக்கு நலமடைகிறது.
பூவுடன் ஆலிவ் எண்ணை சிறிது சேர்த்து, அரைத்து, சூட்டினால் வரும் தலைவலிக்கு நெற்றியில் பற்றுப்போடத் தீரும். கண்ணிமையைச் சுற்றிப்போட்டால் கண்ணீர் வடிதல், கண் சிவப்பு, கண் எரிச்சல் தீரும். மூட்டுவலிக்கு தடவ வலிதீரும்.
இலைத் துளிர்களை அரைத்து சிறு நெல்லிக்காயளவு ஒருமுறை சாப்பிட்டதும் தவறான முறையில் கருகலைத்ததால் ஏற்படும் புண்ணாகி சீழ்படிந்திருந்த வலி 4 மணி நேரத்தில் தணியும். கருப்பையில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளும் இதன் துளிரைச் சாப்பிட்டால் தீரும்.
ஆறாத புண்களுக்கு இலையினை வதக்கிக்கட்டினால் விரைவில் ஆறும். இதற்கு நுண் கிருமிகளை அழிக்கும் ஆற்றலுள்ளது (Anti-biotic). இலையில் நெய்தடவி அதன்மேல் ஓமத்தூள் தூவி உச்சியில் வைத்துக்கட்டினால் சூட்டினால் உண்டாகும் தலைவலி நீங்கும். இலையின் சாறு 1 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டி தேன் கலந்து காலை, மாலை பெண்கள் உண்டுவருவதால் பெண்களின் கருப்பைக் கோளாறுகள் நீங்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு உண்டாகும் குளிர்காய்ச்சல், அலறல், தலையாட்டம் போன்றவைகளுக்கு இலைகளை நெய்யில் வதக்கித் தலையில் கட்டத் தீரும்.
மரப்பட்டையை உலர்த்தி மேற்புறணியை சீவிவிட்டுப் பொடித்து 1/2 கிராம் அளவு காலை, மாலை தேன் கலந்துண்ண காய்ச்சல் நீங்கும்.
எனவே இனிய மணம்வீசுவதுடன் உடல் நலத்தையும் பேணும் சம்பங்கி மரத்தை வீட்டில் வளர்த்துப் பயன் பெறுவோம்.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.
AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்.
41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை - 641402
தொலைபேசி: 0422-2688985
செல்லிடப்பேசி: 93603 36924 மற்றும் 96598 99899
மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 23 செப்டம்பர் 2009 20:49)