| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (6) - குளிர்ச்சிதரும் பன்னீர்ப்பூ (ரோஜா)
அன்பிற்கும், சமாதானத்துக்கும், அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் 'மலர்களின் அரசி' என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில் மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே பன்னீர்ப்பூ.
இப்பூவை உரோமானியர்கள் அரசு விழாக்களில் ஆடம்பரத்திற்காகப் பயன்படுத்தினார்கள். இப்பூக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தால் இத்தாலியிலுள்ள பொசிடோனியாவில் அழகிய கோவில்களையும், பெரிய மண்டபங்களையும் கட்டினார்கள் என்கிறது வரலாறு. மேலும் இவர்கள் அருந்தும் மதுவின் தீமையை விலக்க இப்பூவின் இதழ்களை மிதக்கவிட்டு அருந்தினார்கள்.
முகலாயர்கள் ஆட்சி காலத்தில் தோட்டக்கலையில் ஏற்பட்ட புது மலர்ச்சி காரணமாக 1526ம் வருடம் மன்னர் பாபரால் நமது நாட்டில் பன்னீர்ப்பூக்களின் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மேலும் பல இனப் பன்னீர்ப்பூக்கள் கொண்டுவரப்பட்டன. பண்டித சவகர்லால் நேரு அவர்கள் தன் சட்டையில் தினமும் குத்திக்கொண்டார் என்பதை நாமெல்லாம் அறிவோம்.
முகர்ந்தாலே பயனளிக்கக் கூடியது இந்தப்பூ. முகர்வதால், சளி, தலைவலி கட்டுப்படும். இதன் சாற்றை மூக்கில் விட்டால் தலைவலி குணமாகும். இதழ்களை மென்று தின்றால் வாந்திக்கான அறிகுறிகள் நிற்கும். வாய்ப்புண்கள், வயிற்றுப்புண்கள் குணமாகும். குடல் வலிமை பெறும். சூடு மற்றும் மூல எரிச்சல் தீரும். பெண்மையின் சின்னமாகக் கருதப்படும் பன்னீர்ப்பூவானது பெண்களின் கருப்பையின் வலிமையைக் கூட்டுகிறது. உதிர்ப்போக்கைக் கட்டுப்படுத்துகிறது.
குழந்தைகளின் அன்றாட C உயிர்ச்சத்தின் (Vitamin C) தேவையைப் பூர்த்தி செய்கிறது. மலச்சிக்கலை நிறுத்தும் தன்மை இம்மலரில் உண்டு. சித்தர்கள் இந்தப் பூவை சிற்றாமரை என்றும் அழைத்தார்கள்.
சிற்றாமரைப் பூவால்சேர்ந்தமலக் கட்டுவிடும்ஒற்ற வெப்புத் தாகமதிஒக்காளஞ் - சற்றுவிடாமூலரிவு இரத்தமூத்திரம் வயிற்றிசுவும்ஞாலம்விட்டேகும் நவில்
என்று அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது. இதன் பொருளானது, மலச்சிக்கல், காய்ச்சல், அதிதாகம், ஒக்காளம், மூல எரிச்சல், உதிரங்கலந்த மூத்திரம், வயிற்றுப்புண் முழுமையாகக் குணமாகும்.
ஒரு பங்கு பன்னீர்ப்பூ இதழ்களை மூன்று பங்கு தேன் கலந்து பீங்கான் ஜாடி எனும் கலத்தில் போட்டு 40 நாட்கள் நல்ல வெயிலில் வைத்தெடுத்துத் உருவாக்கப்படுவதான் ரோஜாப்பூக் குல்கந்து எனப்படுவது. இதனை காலை மாலை 1 தேக்கரண்டி சுவைத்துச் சாப்பிட்டுப் பால்குடித்து வந்தால் மேற்கண்ட பலன்களுடன் உதிரவிருத்தியும் உடல்க்குளிர்ச்சியும் ஏற்படும்.
கர்ப்பிணிகள் 5ம் மாதம் முதல் சாப்பிட்டு வந்தால் தேவையான வலிமையும் உதிர விருத்தியும் இன்மகப்பேறுக்கு (சுகப்பிரசவம்) உதவும். பூவை இடித்துச் சாறுபிழிந்து 100 மில்லிலிட்டர் அளவு எடுத்து சம அளவு நல்லெண்ணை சேர்த்துச் சிறுதீயில் காய்ச்சி நீர் சுண்டியபின் வடித்து வைத்துக் கொண்டு பயன்படுத்திவந்தால் நாற்பட்ட புண்கள், நீர்வடிதல், சீழ் நீங்கித் தசை வளர்ந்து நலமடையும். காதில் விட காதுவலி தீரும். பல் ஈறு மற்றும் தொண்டைப் புண்ணிற்கு வாயில்விட்டுக் கொப்பளிக்க நலமடையும்.
பன்னீர் மிகக்குளிர்ச்சிபாராய் சுகசன்னிக்கின்னீருண் ஏகும்,இளைப்புமறுஞ் - சன்னிகளும்.வாதபித்த ஐயமொடுமானே வியாகூலமும்பூதலம் விட்டேகும் புகல்
இதிலிருந்து தயாரிக்கப்பட்ட பன்னீரை உண்பதால் மன உளைச்சல், சோர்வு, சந்நிநோய்களும் வாத பித்த கப தொல்லைகளும் மேல்மூச்சு வாங்குவதால் நலமடைந்து உடல் குளிரும்.
இப்பன்னீரிலிருந்து உருவாக்கப்பட்ட படிகப் பன்னீரை நாள்தோறும் இரவில் கண்களில் விட்டு வருவதால் கண்ணெரிச்சல், சிவப்பு, அரிப்பு கேட்ராக்ட் எனப்படும் கண்படலத்தின் ஆரம்பம் தீரும். கண்கள் குளிர்ச்சியடையும், வாகனப் புகை மற்றும் கிருமித் தொற்றால் கண்பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.
ரோஜாப்பூ லேகியம் எனப்படும் பன்னீர்ப்பூப் பசையை உண்பதால் வயிற்றுப் புண்கள் ஆறும்.
குளிர்ச்சிதரும் பன்னீர்ப்பூவின் பலன்களை நாமும் அறிந்துகொண்டால் அது மலராக மட்டுமல்ல நம் வாழ்வையே மலரவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிரம்மஸ்ரீ. விஜயராகவன்.
AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்.
41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை - 641402
தொலைபேசி: 0422-2688985
செல்லிடப்பேசி: 93603 36924 மற்றும் 96598 99899
மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 10 செப்டம்பர் 2009 08:01)