| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
நாம் எதிர்பார்த்த அழிவுகாலம் நெருங்கிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. என்ன அப்படிச் சொல்லிவிட்டோம் என்கிறீர்களா? அழிவு என்பது இயற்கையால் மட்டுமல்ல மனிதனாலும் வரலாமல்லவா? ஆமாம்! 2012ன் அழிவு உண்மையாகத்தான் இப்போது தோன்ற ஆரம்பித்திருக்கிறது.
ஒரு பக்கம் உழைக்கும் மக்களின் வரிப்பணம் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட மறுபக்கம் மக்கள் முக்கிய உணவுப்பொருட்கள் கிடைக்காமல் அதிகவிலைகொடுத்து வாங்கிக் கொண்டிருப்பது அதிகமாகிக்கொண்டிருக்கிறது. காஞ்சி முதல் காசி வரை உணவுப்பொருள் உற்பத்தியாகும் வயல்கள் பல அழிக்கப்பட்டுவிட்டன. பதவி மற்றும் பணத்தை வைத்து அந்த விளைநிலங்களை வாங்கி வானுயரக் கட்டடங்களைக் கட்டி அடுக்குமாடி வீடுகள் விற்பனைக்கு என்று விற்றுக் காசுபார்த்து இந்த அரசியல்வாதிகள்தான் என்னென்ன அழிவுவேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
யாரும் விதிவிலக்கல்ல, நீ, நான், அவன், இவன் என்று எல்லோரும் குருதி உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாகவே இருப்பதால் நமது சந்ததி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடியும் என்று நினைக்கிறீர்களா? கரியமில வாயுவைக் காற்றில் சுமந்து கொண்டு நமக்குப் பின்வரும் நேரமும் நாட்களும் அழிவுப்பாதையில் தான் சென்றுகொண்டிருக்கிறது.
தற்போது பெய்த மழை ஒன்றும் புதிதல்ல இதைவிட மோசமான மழைக்காலம் நமது நாட்டில் வந்து போன நாட்கள் நமது வரலாற்றில் உண்டு. ஆனால் வெங்காயம் கிலோ அளவு நூறு ரூபாய்ப் பணத்துக்கு விற்ற காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. பிற்பாடு இது குறையும் என்றாலும் இது நமது விவசாயம் அழிந்தால் என்னவாகும் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு.
ஒரு தொடர்மழைக்கு காய்கறிகள் பற்றாக்குறையில் மக்கள் தவிப்பார்களேயானால், நிரந்தரமாக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டால், அதன் மூலம் விவசாயம் தடைபட்டால் பசியால் அழிவதைத் தவிர வேறென்ன இருக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 24 திசம்பர் 2010 11:48)