மது அருந்துவதால் நம் சிறுமூளை பாதிப்படைந்துவிடும் என மருத்துவம் கூறினாலும், மது அருந்துவது உயிருக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு என்று விளம்பரம் செய்தவாறே அரசாங்கம் மக்களுக்கு விற்பனை செய்வது வெக்கக் கேடாக இல்லையா?... எண்ணிப் பாருங்கள். |
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...
1. நிறைய நீர் குடிக்கவும்
நம் உடல் 75 விழுக்காடு நீரால் ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரின் இன்றியமையாமையைப் பற்றி வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். தினமும் 7 முதல் 9 செம்பு தண்ணீரைக் குடித்தே ஆகவேண்டும். நீர் அதிகமாகச் சேர்வதால் நம் உடம்பிலிருக்கும் கழிவுநீர் வேர்வையாகவும் சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது.
2. அடிக்கடி சாப்பிடுங்கள் ஆனால் குறைவாகச் சாப்பிடுங்கள்
ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். உடல் எடையைக் குறைக்க ஒருவேளை சாப்பிடாமல் இருப்பதை பழக்கமாக மேற்கொண்டால், நமது உடம்பின் வளர்சிதை மாற்றம் (metabolism) பாதிக்கப்பட்டு, குறைவான வேகத்தில் திறனையும் கொழுப்பையும் கரைக்கும். இதனால் கொழுப்பு அதிகமான அளவில் உடலில் தங்கிவிட வாய்ப்புள்ளது. அதற்குப்பதிலாக ஒரு ஐந்து முறை மிகக்குறைந்த அளவில் அதிகமான புரதம், உயிர்ச்சத்துக்கள் உள்ள காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பருப்பு வைகைகளை உட்கொள்ளுங்கள்.
இதன்மூலம் உதிரத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகமாவது தடுக்கப்படுவதால் நீங்கள் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
3. வெள்ளைதான் நம் உடல்நலனைக் கொள்ளையடிக்கப் பிறந்தது.
வெள்ளைநிறத்திலிருக்கும் எந்த உணவாகட்டும் (புரோட்டா, ரொட்டி, அரிசி, வெள்ளைச் சர்க்கரை) அவை இயற்கையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுப் பதப்படுத்தப்பட்டு அதிலிருக்கும் உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் (Fibre) எடுக்கப்ப்பட்டு வரும் உணவுகளே! இவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இவைகளுக்கு மாற்றாக கோதுமைச்சப்பாத்தி, காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை ரவை உப்புமா வெள்ளைரவை உப்புமாவை விட பலமடங்கு சிறந்தது.
4. கல்லீரலைச் சுத்தப்படுத்துங்கள்
நம் உடலில் அதிகம் வேலைசெய்யும் உறுப்புக்களில் கல்லீரல் மிக முக்கியமானது. தினமும் காலை நேரத்தில் எலுமிச்சம்பழத்தின் சாறை நன்றாகத் தண்ணீரில் கலந்து கொஞ்சம் கருவேப்பிலையைக் கசக்கிப்போட்டு இரண்டு குவளை குடித்துவிடுங்கள். இது கல்லீரலைச் சுத்தப்படுத்தி அதன் தடங்கலற்ற செயல்பாட்டுக்கு உதவுகிறது.
5. சுறுசுறுப்பாக இருங்கள், குனிந்து வளைந்து வேலைசெய்யுங்கள்
தினமும் சாதாரண நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். படிகளில் ஏறுங்கள், கீழே எதுவிழுந்தாலும் கால்களில் மெட்டிக் கைகளில் வாங்காதீர்கள், குனிந்து எடுங்கள். சுறுசுறுப்பாக இருப்பதால் நோய்களே அண்டாது.
6. 7 முதல் 8 மணிநேரம் தூங்குங்கள்
தூக்கம் நம் உடலுக்கு வலுவான நலனையும் திறனையும் அளிக்கிறது. மூளை செயல்பட தூக்கம் அவசியமாகிறது. தூக்கமிழப்பதால் தினசரிச் செயல்களில் கவனமிழக்கிறீர்கள். எனவே, தூங்குங்கள்.
இயற்கையோடு ஒத்துவாழப் பழகுங்கள். உங்களோடு இயற்கை கைகோர்க்கும்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 08:28)