| நம் மூச்சுக்காற்றைத் தூய்மைப்படுத்தி அனுப்பிவைக்கும் மரங்கள் நமது உயிர் உரங்கள்!... எண்ணிப் பாருங்கள். |
கட்டுரைகள்
செம்மொழி மாநாடு கண்டோம், இனியென்ன நாம் காண வேண்டும்?
திருவிழாக்கள் தமிழர்களின் ஏடறிந்த வரலாற்றுக் காலந்தொட்டு வளர்ந்து வருபவை. தமிழர் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தவை. சமூகத்தில் பன்முகத்தன்மைகள், பண்பாட்டு எச்சங்கள் போன்றவை இவற்றுள் பொதிந்திருப்பதை சமூக ஆர்வலர்கள் விரித்துரைப்பர். அண்மையில் கோவையில் நடந்து முடிந்த உலகத்தமிழ் மாநாடும் ஒரு பெரும் திருவிழாதான். கோவை இதுவரை கண்டிராத பெரும் திருவிழாதான். கோவை இதுவரை கண்டிராத பெரும் விழா.
கொங்கு நாடு, பழந்தமிழர்கள் ரோமாபுரியுடன் கொண்டிருந்த கடல் வாணிபத் தொடர்பை விளக்கும் தரவுகளைப் புதை பொருளாகக் கொண்ட செந்தமிழ் பரப்பாகும். இந்த நாட்டை ஊடருத்துச்சென்ற இராசராசன் பெருவழியில் உள்ள சித்தநாயக்கன் பாளையம் அடியேனது பிறப்பகம். இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக இடையின்றி நடைபெற்றுவரும் மாகாளியம்மன் தேர் திருவிழாவின் வேறோர் பரிமாணமாகவே செம்மொழித்திருவிழா இருந்தது. நாற்பது ஆண்டுகளுக்குமுன் 1970 களின் நினைவுகளோடு மாநாட்டு மக்கள் திரளில் கலந்தலைந்தேன்.
செம்மொழித் திருவிழாவில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியும் இருந்தது. புத்தக விற்பனை மந்தமாக இருந்ததாகப் பதிப்பாளர்கள் பலர் தெரிவித்தார்கள். விலையும் ஒரு காரணம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடுகள் குறைந்தவிலையில் உள்ளன. தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக வெளியீடுகள் அதிக விலையில் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகள் விலைக்குறிப்பை மேலொட்டி விலை மாற்றப்படாமல் விற்கப்பட்டன. பல வெளியீடுகள் இற்றுப்போனவை. தமிழ்நாட்டுப் பல்கலைகழகங்களின் தமிழ் வளர்ச்சிப் பணி ஏதுமில்லை என்று சொல்லத்தக்க அளவில்தான் வெளியீடுகள் இருந்தன.
கவியரங்குகள், பேச்சரங்குகள், பட்டிமன்றங்கள் தமிழக முதலமைச்சரைப் புகழ்ந்தே கழிந்தன. மாநாட்டுக்கு முன் மூன்று நாட்கள் மாநகரில் 11 இடங்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. நகர மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று கண்டு களித்தனர்.
மாநாட்டு கண்காட்சி அரங்குகள் நன்கு திட்டமிட்டு அமைக்கப் பட்டிருந்தன. சிந்துவெளி நாகரீகத்தின் முன்னோர் தமிழரே, சிந்துவெளி எழுத்துக்கள் பழந்தமிழே எனும் திண்ணமான உண்மையைத் தெரிவிக்கும் முகத்தான் அனைத்தும் அமைக்கப்பட்டிருந்தது பாராட்டத்தக்கதே! மாநாடு முடிந்து 7வது நாளும் இக்கண்காட்சியைக் காண ஆர்வமாக வந்து கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது வரிசையில் பலமணிநேரம் நின்ற மக்கட்கூட்டத்தை அடியேன் கண்டதுமில்லை காணப் போவதுமில்லை!.... நிற்க...
செம்மொழி மாநாட்டின் பலன்களாக இருக்கவேண்டியவைகளைச் சுட்டிக்காட்டுவது தமிழ் சமூக நலனை நாடும் அடியேனின் கடமையாகும்.
'இவையெல்லாம் சாத்தியமா?' என்றால், நிச்சயம் சாத்தியமே. சிற்றூரிலிருந்து பெருநகரங்கள் வரை தமிழ்ப்பணியாற்றும் ஆர்வலர்கள், பல்துறை வல்லுநர்கள் உள்ளனர். இவர்களை அடையாளங்கண்டு ஒருங்கிணைக்க வேண்டும். கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும். முதற்கட்டமாக மாவட்டங்கள்தோறும் செம்மொழி அலுவலங்கள் செயல்பட அரசு ஏற்பாடு செய்யவேண்டும். எது எப்படி ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதை நடைமுறையில் தீர்மானிக்கலாம்.